Tuesday, October 23, 2012

முக்தா சீனிவாசனை முறைத்துக்கொள்ளும் கமல்

கமலுக்கு லீகல் நோட்டிஸ் அனுப்பியிருக்கிறார் முக்தா சீனிவாசன். பழம்பெரும் தயாரிப்பாளரான முக்தா சீனிவாசன் 1947ம் ஆண்டு முதல் தமிழ்த்திரையுலகிலிருக்கிறார். இவர் இயக்கிய முதலாளி திரைப்படத்திற்காக ஜனாதிபதி ராதாகிருஷ்ணனிடமிருந்து தேசிய விருது பெற்றவர். திரையுலகின் ஜாம்பவான்களான டி.ஆர்.மகாலிங்கம், மாடர்ன் தியேட்டர்ஸ் சுந்தரம், பாலச்சந்தர், மு.கருணாநிதி போன்ற பலரோடும் பணிபுரிந்திருக்கிறார். கமலின் நாயகன் உட்பட சிம்லா ஸ்பெஷல், பொல்லாதவன், அந்தமான் காதலி முதலிய ஏராளமான படங்களின் தயாரிப்பாளர். இவ்வளவு அனுபவம் மிக்க தயாரிப்பாளர், இயக்குனரைத்தான் வம்புக்கிழுத்திருக்கிறார் கமலஹாசன்.
            நாயகன் படம் வெளியாகி 25 ஆண்டுகள் ஆகியிருப்பதை ஒட்டி ஹிண்டு நாளிதழில் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார் கமல். அதில் நாயகன் படத்தயாரிப்பாளரைப் பற்றி எக்கச்சக்க குறைகள் சொல்லியிருக்கிறார். பம்பாயில் படமெடுக்க தயாரிப்பாளர் தயாராக இல்லை, அவர் சினிமாவை வியாபாரமாக ட்ரீட் செய்தார், கலை வடிவமாகப்பார்க்கவில்லை - இது கட்டுரையின் சாராம்சம்.  
                     சரி, கமல் தயாரிப்பாளராக இருந்த படங்களின் லிஸ்ட் கீழே உள்ளது - அபூர்வ சகோதரர்கள், தேவர்மகன், மகளிர் மட்டும், சதிலீலாவதி, விருமாண்டி, விக்ரம். மேற்சொன்ன படங்கள் அனைத்துமே பாக்ஸ் ஆபிஸ் மெகாஹிட்.  இவரது கலை மற்றும் டெக்னாலஜி தாக சோதனை முயற்சிகள் - பேசும் படம், ஆளவந்தான், தசாவதாரம் ........ இதில் ஏதாவது ஒன்று அவருடைய தயாரிப்பா? ஆளவந்தான் தந்த அடியிலிருந்து இன்னும் கலைப்புலி தாணு மீண்டதாகத் தெரியவில்லை. இதே கமல் அவரது தயாரிப்பில் செய்த சோதனை முயற்சி - குணா, உன்னைப்போல் ஒருவன், மும்பை எக்ஸ்பிரஸ் ... இந்தப்படங்களுக்கு மிஞ்சி மிஞ்சிப்போனால் என்ன செலவாயிருக்கும்?? தான் தயாரிப்பாளராயிருக்கும் போது ஒரு பட்ஜட், மற்றவர் தயாரிப்பாளராயிருக்கும்போது வேறொரு பட்ஜட். இதுவே கமலின் நிலைப்பாடு. அப்படியிருக்கையில் எந்த அடிப்படையில் ஒரு பழம்பெரும் 82 வயது இயக்குனர், தயாரிப்பாளரை இவர் அவமானப்படுத்துகிறார்?
எல்லோரும் பணம் சம்பாதிக்கத்தான் ஏதாவது ஒரு தொழிலில் ஈடுபடுகின்றனர். கமலும் இதற்கு விதிவிலக்கல்ல. அவரெல்லாம் உங்களை வைத்துப் படமெடுத்ததால்தான் இன்று நீங்கள் இந்நிலையில் இருக்கிறீர்கள் ஐயா. பழசை மறக்க வேண்டாம்.

Tuesday, October 16, 2012

எதிர்பார்ப்பைக் கிளப்பி ஏமாற்றிய தமிழ் சினிமா பிரபலங்கள்-2

இந்தத் தொடர் பதிவில், இந்த வாரம் இயக்குனர் மணிரத்னத்தைப் பற்றி பகிர விருப்பம். மணிரத்னத்தின் படம் திரையுலக சுஜாதா நாவல். மிக அழகான நடை.அழகே அழகான விஷுவல்ஸ்.லைட் மூவிஸ் வரிசையில்- மௌனராகம், அக்னிநட்சத்திரம், அலைபாயுதே, கமர்சியல் ஹிட்டாக நாயகன், தளபதி, கொஞ்சம் ஹெவி சப்ஜக்ட்டில் அஞ்சலி, ரோஜா, பம்பாய் இவைகள் மிகவும் ரசிக்கத்தக்க விதத்தில், என்ன ஒரு அருமையான காட்சிகள், நடிப்பு, இசை - மௌனராகம் கார்த்திக் இன்று வரை ஒரு துறுதுறுவென இருக்கும் ஹீரோவின் அடையாளம்.(இப்போதைய கதாநாயகிகளும் கதாநாயகனை உனக்கென்ன மௌனராகம் கார்த்திக்னு நெனப்பா என்று கேட்கிறார்கள்). இப்படி என்றும் இனிமையாய் இருக்கும் படங்களைத் தந்த மணிரத்னத்தின் சமீபத்திய 2, 3 தமிழ்ப் படங்கள் - டிஸாஸ்ட்ரஸ். 

கடைசியாக வெளிவந்த ராவணன் - எந்த தமிழ் கிராமத்தில் இப்படியெல்லாம் டான்ஸ் ஆடுகிறார்கள், எந்த தமிழ் கிராமம் பார்ப்பதற்கு அவர்கள் காண்பித்த கிராமம் போல் இருக்கிறது? இவர் தமிழ் ஹிந்தி - 2 மொழிப்படத்தையும் ஒரே செட் போட்டு எடுத்து விட முயற்சிக்கிறார். முடிவு, அது தமிழ்ப்படமாகவும் இல்லை, ஹிந்திப்படமாகவும் இருப்பதில்லை. நம்மால் படத்தோடு ஐக்கியமாகவே முடிவதில்லை.

ஆய்த எழுத்து - காட்சிகளில் இவரது முந்தைய படங்களில் இருந்த யதார்த்தம் இல்லை, வசீகரம் இல்லை. மிகைப்படுத்தல் தான் துருத்திக்கொண்டு நிற்கிறது. குறிப்பாக சூர்யாவின் காதல் காட்சிகள் - தவிர்க்க முடியாமல் தளபதியில் ரஜினியும், ஷோபனாவும் காதல் தோல்வியின் போது சந்தித்துக்கொள்ளும் காட்சி நினைவில் வருகிறது - அழாதே என்று சொல்லும் ரஜினியின் உக்கிரமான காதல் - தொய்ந்து நடக்கும் ஷோபனாவை, அவர் அறியா வண்ணம் திரும்பிப் பார்க்கும் ரஜினி - என்னவொரு சீன்...

உயிரே படமும் தமிழ், ஹிந்தி குழப்பத்தில் அடி வாங்கியதுதான். மணிரத்னம் சார் பிளீஸ், தமிழர்களுக்கென்று பிரத்தியேகமாக படம் எடுங்கள். மௌனராகம், அக்னிநட்சத்திரத்தில் பார்த்த மேஜிக்கை மீண்டும் பார்க்க மிக ஆவலாக இருக்கிறோம்.

Saturday, October 6, 2012

எதிர்பார்ப்பைக் கிளப்பி ஏமாற்றிய தமி்ழ் சினிமா பிரபலங்கள் - 1

ஒன் மூவி வொண்டர், flash in a pan என்றெல்லாம் சொல்வார்களல்லவா - அதைப்போன்று தங்கள் திறமையால் நடிப்பு, இயக்கம், இசைத்துறைகளில் இரண்டு, மூன்று படங்களில் நம்மைத் திரும்பிப்பார்க்க வைத்த பிரபலங்கள் தொடர்ச்சியாக அடுத்தடுத்த படங்களில் நம்மை மிகுந்த ஏமாற்றத்துக்கு உள்ளாக்கியிருக்கிறார்கள். சிலர் திரையுலகிலிருந்து காணாமலே போய்விட்டார்கள். அவர்களில் சிலரைப்பற்றி ஒரு ரவுண்ட் வருவோம்.

முதலில் இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா
வாசுதேவநல்லூரில் பிறந்து தன் 31வது வயதில் 1999ம் ஆண்டு வாலி படத்தை இயக்கினார். படம் சூப்பர் டூப்பர் ஹிட். அடுத்த படம் குஷி. வாலி படத்தில் கூட சாலிடான கதை இருந்தது. ஆனால் குஷி படத்தின் துவக்கத்திலேயே இவங்க 2 பேரும் தாங்க லவ் பண்ணி கல்யாணம் பண்ணிக்கப் போறாங்க என்று சொல்லிவிட்டார். எனவே எந்த விதமான திருப்பங்களுக்கும், சஸ்பென்ஸ்களுக்கும் இடமில்லை. திரைக்கதைதான் பேசியாக வேண்டும். இந்நிலையில் மாலை கோர்ப்பது போல் திரைக்கதையைக் கோர்த்து என்ன ஒரு அருமையான வெற்றிப்படத்தைக் கொடுத்தார். திரைக்கதையில் பாக்யராஜுக்கு அடுத்து ஒருவர் கிடைத்துவிட்டார் என்று மிகப்பாஸிட்டிவான ரெவ்யூக்கள். நிகழ்ச்சிகளைக் காட்சிப்படுத்துவதோ, எழுதுவதோ கஷ்டமில்லை. ஆனால் மனவுணர்வுகளைக் காட்சிப்படுத்துவதும், வார்த்தைகளாக்குவதும் மிகக் கடினம்.  அதை சர்வசாதாரணமாக குஷியில் செய்து காட்டினார். இப்படி இவர் இயக்குனராகவே தொடர்ந்திருக்கலாம். கதாநாயகனாக நடிக்கவேண்டும் என்று இவர் எடுத்த முடிவு தவறு என்றே நினைக்கிறேன்.
இருப்பினும் இவர் ஹீரோவாக நடித்த நியூ படம் முதல் நாள் 1 கோடி ரூபாய் வசூலித்ததாம். இது ஒரு பாக்ஸ் ஆபிஸ் சாதனை. அதிலிருந்து துவங்கியது இவருடைய வீழ்ச்சி. இவருடைய டயலாக் டெலிவரி தவிர்க்க முடியாமல் நகைச்சுவை நடிகர் பாண்டுவை நினைவுறுத்துகிறது. கதாநாயகனுக்குரிய பாடி லாங்வேஜ், டயலாக் டெலிவரி இவரிடம் இல்லை.
தன்னை இயக்குனராகவே அடையாளப்படுத்திக்கொண்டு அந்தப்பாதையிலேயே இவர் தொடர்ந்திருக்கலாம். பரவாயில்லை. இட்ஸ் நாட் டூ லேட். வாலி, குஷி போன்ற மிக அருமையான கதை, திரைக்கதை உடைய படங்களை இவர் தருவார் என்று நம்புவோம்.
இன்னும் சில பிரபலங்கள் பற்றி அடுத்தடுத்த பதிவுகளில்..........

Friday, October 5, 2012

ராசிக்கு ஆறாம் இடத்திலிருக்கும் சனிபகவான் அதிர்ஷ்டம் தருவாரா?

ஒவ்வொரு கிரகங்களும் பெயர்ச்சி ஆகும்போது, சனிப்பெயர்ச்சி பலன்கள், குருப்பெயர்ச்சி பலன்கள், ராகு-கேது பெயர்ச்சி பலன்கள் என்று பார்த்துத் தள்ளுவது தமிழர்களின் ஒரு பொதுவான குணம். ஏதாவது ஒன்று நடந்து நமக்கு நல்லகாலம் பிறந்துவிடாதா என்று நினைப்பதில் எந்தத் தவறும் இல்லை. நாலாப்பக்கமும் வாழ்க்கை நசுக்கும்போது வெளியேற வழிதேடுவது மனித இயல்பு.

இதைத்தான் நம் பகுத்தறிவு சிங்கம் கருணாநிதியும் செய்திருக்கிறார். குருபகவான் அருள் பெறுவதற்காக மஞ்சள் துண்டு அணிந்தவர், தற்போது கறுப்புக்கு மாறியிருக்கிறார். காரணம், இவர் ரிஷப ராசிக்காரர். ரிஷப ராசிக்கு இப்போது ஆறாமிடத்தில் இருக்கிறார் சனிபகவான். ஜோதிட ரீதியில் இது ஒரு நல்ல அமைப்பாம். கறுப்புச்சட்டை அணிந்தால் ரொம்ப விசேஷமாம்.ஆனால் இதையெல்லாம் வெளியில் சொல்ல முடியுமா? அதனால் ஜெயலலிதா மீது பழியைப் போட்டுவிட்டு கறுப்புச்சட்டை.

இது தெரியாமல் தொண்டர் படையும் கறுப்புச்சட்டை அணிந்து கொண்டு ஆயிரம் விளக்குப்பகுதி தொடங்கி எல்லா இடத்திலும் சுற்றிக்கொண்டிருக்கிறது. தொண்டர்களே நீங்கள் என்ன செய்தாலும் தலைவர்தான் நல்லாயிருப்பார். அதனால் வடிவேலு சொன்னது போல் -  கப்பித்தனமா பேசாம புள்ளக்குட்டிய படிக்க வைங்க.

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | coupon codes