முதலில் உங்கள் திருமண வாழ்க்கைக்கு வாழ்த்துக்கள். எப்படியும் உங்களுக்குச் சமமாகப் படித்த, வேலை பார்க்கும் பெண்ணைத்தான் தேர்ந்தெடுப்பீர்கள். சமீபத்தில் நான் பார்த்த வரை, அழகிய தோற்றத்திற்கு அதிகப்படியான முக்கியத்துவம் கொடுத்து மனைவியைத் தேர்ந்தெடுப்பதும் நடக்கிறது. தவறில்லை - ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு ஆசை, கனவு.
ஆனால் பெண்களின் உடலியல் கூறுகள் பற்றிய சில அறிவியல்பூர்வமான தகவல்களையும், பெண்களின் மனவியல் பற்றியும் சில தகவல்களை அறிந்து கொள்வது ஒவ்வொரு ஆணுக்கும் அவசியம்.
பார்ப்பதற்குக் குடும்பப்பாங்கா இருக்கணும் என்று நீங்கள் பார்த்துப் பார்த்துத் தேர்ந்தெடுத்த பெண் பார்ப்பதற்கு சினேகா போலோ அல்லது மவுன ராகம் ரேவதி போலவோ இருக்கலாம். ஆனால் மவுனராகத்தில் ரேவதி சொல்வது - எனக்கு ரொம்ப பிடிவாதம் உண்டு, முன்கோபம் உண்டு,சொன்ன பேச்சு கேட்கமாட்டேன் - இதுவே நிஜம். சினேகா போல் சிரித்துக்கொண்டே நீங்கள் சொன்னதெற்கெல்லாம் சரி சொல்வாள் என்று நினைத்துக்கொள்ளாதீர்கள். விஜய் டிவி நீயா நானாவில் பெண்கள் வன்மம் வைத்து பழி வாங்குவது குறித்துப்பேசிய போது ஆண்கள் அதிர்ந்து விட்டனர். எனக்கு என்ன ஆச்சரியம் என்றால் இது கூடவா ஆண்களுக்குத் தெரியாது என்பதுதான். பெண்களின் வன்மம் குரூரமானது. அவர்கள் கோல்ட் பிளட்டட் ஆக எளிதில் செயல்படுவார்கள் . பெண்கள் மிகவும் மென்மையானவர்கள். அவர்களை நம் இ\ஷ்டத்துக்கு வளைத்துக்கொள்ளலாம் என்று நினைப்பவர்கள் - உஷார்.
இன்னொரு முக்கியமான விஷயம் - நீங்கள் செய்த, சொன்ன விஷயத்தை ஒரு நாள் சாதாரணமாக எடுத்துக்கொண்டவர்கள் வேறொரு நாள் அதே போன்ற ஒரு விஷயத்துக்காக சண்டையிடலாம். குழம்பிவிடாதீர்கள்.பெண்களுக்கு பி.எம்.எஸ் என்று ஒரு பிரச்சினை உண்டு. இது மாதா மாதம் அவர்களின் உடல் நலம், மன நலம் இரண்டையுமே பாதிக்கிறது. பெண்களின் பீரீயட்ஸ் நாட்களுக்கு 4 நாட்கள் முன்பிருந்தே அவர்களுக்கு தீடீர்க்கோபம், திடீர் அழுகை, டிப்ரஷன் போன்றவை வர ஆரம்பிக்கின்றன. இது அனேக ஆண்களுக்குத்தெரிவது இல்லை. ஏன் காரணமில்லாம அழறா? பொம்பளங்க மனச புரிஞ்சுக்க முடியாது - என்று பத்தாம் பசலித்தனமாக யோசிக்காதீர்கள். இது போன்ற சமயங்களில் அவர்களை சமைக்கவோ, வேறு வேலைகள் செய்யவோ வற்புறுத்தாதீர்கள். வெளியே பார்ப்பதற்கு அவர்கள் நலமாய் இருப்பது போல் தான் உங்களுக்குத்தெரியும். ஆனால் அவர்களுக்குள் உடல் மன ரீதியாகப் பிரளயம்தான் நடந்து கொண்டிருக்கும். இது போன்ற சமயங்களில் அவர்களுக்கு நீங்கள் செய்யும் ஒவ்வொரு சின்ன உதவியும், உங்கள் மீதான அன்பையும், காதலையும், மரியாதையையும் பன்மடங்கு அதிகரிக்கும். மாறாக உங்களது சிறிய உதாசீனமும் உங்கள் மேல் வெறுப்பை விஷவிருட்சம் போல் வளர்க்கும். ஏற்கனவே நான் சொன்ன பெண்களின் வன்மத்தை நீனைவில் கொள்க.
தற்போதைய பெண்கள் உங்கள் அம்மாக்கள் போல் கிடையாது. பொருளாதார ரீதியாக சப்போர்ட் பண்ணுவதிலும், குழந்தைகளை அறிவுச்சுடராக வளர்ப்பதிலும் உங்கள் அம்மா வை விட உங்கள் மனைவி பன்மடங்கு உயர்ந்து இருக்கப்போகிறாள் - அவளின் படிப்பு மற்றும் எக்ஸ்போஷர் காரணமாக. அதே நேரம் உங்களின் அர்த்தமற்ற அடக்குமுறைகளை ரிஜக்ட் செய்வதிலும் அவள் உங்கள் அம்மாவிடமிருந்து வேறுபடத்தான் போகிறாள்.



11:19:00 AM
மாலா வாசுதேவன்